Followers

Friday, June 08, 2012

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு-2

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு-1


காலை 10 மணி. ரஹீமுக்கு மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து சொந்தங்கள் நண்பர்கள் என்று தொடர்ந்து அலைபேசியில் துக்கம் விசாரித்து கேட்ட வண்ணம் இருந்தனர். வீட்டில் சாப்பாட்டு ஏற்பாடு தடை பட்டதை உணர்ந்து கொண்ட உறவினர்களும் நண்பர்களும் ஒவ்வொருவராக விடை பெற ஆரம்பித்தனர். நெருங்கிய உறவினர்கள் ஐந்து அல்லது ஆறு பேர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நண்பன் தாஹிர் வீட்டிலிருந்து மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பகல் ஒரு மணி. மதிய நேர தொழுகைக்கான அழைப்பொலி மசூதியிலிருந்து வந்து கொண்டிருந்தது. பள்ளியை நோக்கி ரஹீமும் குத்தூஸூம் நடக்க ஆரம்பித்தனர்.

ரஹீம்: மாமா! நான் அப்பாவுக்கு தொழுகை நடத்தும் முன்பே எல்லோர் முன்னிலையிலும் கேட்டிருக்க வேண்டும். ஊர் மக்கள் பண்ணிய கலாட்டாவில் மறந்து விட்டேன். எனவே இப்போது கேட்கிறேன். அப்பா யாரிடமாவது கடன் வாங்கியிருக்கிறார்களா? உங்களிடமோ அம்மாவிடமோ ஏதும் சென்னார்களா?

குத்தூஸ்: உன் அப்பா அப்படிபட்டவர் அல்ல. தேவைக்கு கொடுக்க நீ இருக்கும் போது அவர் யாரிடம் கடன் வாங்கப் போகிறார். அப்படி ஏதும் இல்லை.

ரஹீம்: கடைசி ஆசை ஏதும் அப்பாவுக்கு இருந்ததா?

குத்தூஸ்: கடைசி ஆசை.... ஆம். இறந்து போவதற்கு இரண்டு நாள் முன்பாக என்னையும் உன் அம்மாவையும் அருகில் அழைத்து தனது தம்பி அதாவது உனது சித்தப்பன் சிரமப் படுவதால் நாலு ஏக்கர் நிலத்தையும் வாடகை கட்டிடங்களில் இரண்டு கட்டிடத்தையும் தனது தம்பி பெயருக்கு மாற்ற விரும்புவதாகவும் நீ ஊருக்கு வந்தவுடன் இதைப் பற்றி பேச வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் உன்னிடம் சொல்வதற்கு முன்பே இறைவன் அவரை அழைத்துக் கொண்டு விட்டான்.

ரஹீம்: நல்லவேளை! நான் கேட்டபிறகாவது சொன்னீர்களே! இரண்டு மூன்று நாட்கள் கழித்து ரிஜிஸ்டர் ஆபிஸ் சென்று அந்த வேலைகளை கவனிக்க வேண்டும்.

குத்தூஸ்: நன்றாக யோசனை செய்து கொள் ரஹீம். அவசரப்படாதே! உன் அப்பா அவருக்கு எழுதி எல்லாம் கொடுக்கவில்லை. அவரிடமும் இது விஷயமாக சொல்லவில்லை. வாய் பேச்சாக எங்களிடம் சொன்னதுதான். உனக்கும் எதிர்காலம் இருக்கிறது. உன் சித்தப்பாவுக்கு அவரது பங்கை ஏற்கெனவே பிரித்தும் கொடுத்தாகி விட்டது.

ரஹீம்: எல்லாம் எனக்கும் தெரியும் மாமா! சித்தப்பா தனது மூன்று பெண் குழந்தைகளை கட்டிக் கொடுத்ததில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் சென்று விட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? நான் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டால் அப்பாவின் மரண சாசனத்தை பொருட்படுத்தத் தேவையில்லை. ஆனால் இறைவன் கிருபையில் சவுதியில் நல்ல வேளை: சம்பளம்: எல்லாம் சுகமாக இருக்கும் போது அப்பாவின் மரண சாசனத்தை செயல்படுத்துவதான் நல்லது.

அதற்குள் மசூதி வரவே கை கால்களைக் கழுவ இருவரும் பள்ளியினுள் நுழைந்தனர். பள்ளியில் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) சொல்லியும் பள்ளியை கூட்டி பெருக்கியும் வரும் ஜக்கரியா ரஹீமை நோக்கி வந்தார்.

ஜக்கரியா: அஸ்ஸலாமு அலைக்கும் ரஹீம்! அப்பா இறந்து போனது எங்களுக்கெல்லாம் ரொம்ப துக்கத்தைக் கொடுத்தது. ஒரு வேளை தொழுகையையும் விட மாட்டார்.

ரஹீம்: வஅலைக்கும் சலாம் ஜக்கரியா பாய்! என்ன செய்வது. இறைவன் நாட்டம் எதுவோ அதை நாம் பொருந்திக் கொள்ளத்தானே வேணும்?

ஜக்கரியா: குளிப்பாட்ட, பாத்திஹா ஓத, தொழ வைக்க என்று எதிலுமே எங்களை கூப்பிடாம நீயே எல்லாத்தையும் செஞசுட்டியே! சந்தோஷம். அப்போ நாங்கல்லாம் வேற வேலை பார்க்க போக வேண்டியதுதான்.
ஜக்கரியாவின் குத்தல் பேச்சைக் கண்டு கோபம் வந்தாலும் ஏதும் பேசாமல் பள்ளியினுள் தொழச் சென்றான் ரஹீம்.

தொழுகை முடிந்து வீட்டை அடைந்தனர் ரஹீமும் குத்தூஸூம். மதிய சாப்பாடும் தயாராக இருந்தது. எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர். ஆனால் தாயார் ஜூனத் சாப்பிட மனமில்லாமல் தனது அறையிலேயே இருந்தார். ரஹீம் சென்று தாயாருக்கு ஆறுதல் சொல்லி சாப்பிட அழைத்து வந்தான். மதிய சாப்பாடு முடிந்து ஹாலில் வந்து அனைவரும் அமர்ந்தனர்.

ஜீனத்: 'உன் அப்பாவுக்காக ஆக்க வேண்டிய சாப்பாட்டை நிறுத்தினது எனக்கு மனசு கேட்கல்ல. இவ்வளவும் கஞ்சத்தனம் பண்ணாதே ரஹீம்'

ரஹீம்: அடடா...நீங்க இன்னும் என்னை புரிஞ்சுக்கல்ல.. மார்க்கம் தடை செய்த ஒன்றில் நாம நம்முடைய பொருளாதாரத்தை வீணடித்தால் இறைவன் நம்மை கேட்க மாட்டானா?

ஜீனத்: ராகவன் தம்பி! நீயாவது உன் கூட்டாளிக்கு எடுத்துச் சொல்லப்படாதா?

ராகவன்: நான் எடுத்துச் சொல்வதா? உங்க பையன் ஊருக்கே உபதேசம் பண்ணிக் கொண்டு இருக்கிறான். அவன் சொல்றதும் நியாயமாத்தானம்மா இருக்கு. இறந்த வீட்டில சாப்பாடு சமைப்பது எனக்கும் சரியாகப் படவில்லை.

ஜீனத்: நீயும் அவன் கட்சியில சேர்ந்துட்டீயா?

ராகவன்: ஹா..ஹா..அம்மா இந்த வயதில் ஒவ்வொருத்தன் சினிமா நடிகனுக்கு ரசிகர் மன்றம் வச்சுகிட்டு பாலாபிசேகம் பண்ணிகிட்டு திரியறானுங்க. உங்க பையன் முற்றிலும் வித்தியாசமா ஊருக்கு நல்லது செய்யனும். மூடப் பழக்கங்களை ஒழிக்கனும். நாலு பேர் நல்லா இருக்கனும் என்று நினைக்கிறானே! இப்படிப்பட்ட ஒரு புனிதனை பெறுவதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ரஹீம்:அம்மா! நான் பணம் செலவாகுமே என்று விருந்தை நிறுத்தல்லே! நான் என்ன சமாதானம் சொன்னாலும் உணர்ந்து கொள்ளும் மூடில் நீங்க இல்ல.

நம்ம ஊர்ல சுகாதாரமான குடி நீர் இல்லை. அதனால டவுனுக்கு இன்று நானும் ராகவனும் சென்று ஒரு கம்பெனியில மிஷின் ஆர்டர் கொடுக்கச் செல்கிறோம். நம் வீட்டின் வெளித் திண்ணையில் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சாதனத்தை வைக்கத் திட்டமிட்டுள்ளேன். ஊர் மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்கும். இதை எனது அப்பாவின் பெயரில் ஊருக்கு அர்ப்பணிக்கிறேன். அடுத்து நம்முடைய கடைகளில் ஒன்றை நூலகமாக மாற்றி அதற்கு அப்பாவின் பெயரையும் வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கெல்லாம் சேர்த்து நான்கு லட்ச ரூபாய் வருமாம். பராமரிப்பு செலவுகள் வேறு வருடா வருடம் உள்ளது. பணத்தை மதிப்பவனாக இருந்தால் இந்த செலவுகளை செய்ய என் மனது இடம் கொடுக்குமா!

ஜீனத்: இது மட்டும் மார்க்கத்துல சொல்லியிருக்குதோ!

ரஹீம்: கண்டிப்பாக! மார்க்கம் சொல்லவில்லை என்றால் நான் எதற்கு நான்கு லட்ச ரூபாயை இதில் முடக்க வேண்டும். இந்த சுத்திகரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட தண்ணீரை சாதி மத வித்தியாசம் பாராமல் அனைவரும் பயன்படுத்துவர். அதே போல் நூலகத்தின் மூலம் அறிவு பெற்று நேர்வழி அடையும் அனைவரின் நன்மைகளில் ஒரு பகுதி எனது தந்தைக்கு சென்றடையும். அப்பா யாரிடமும் கடன் பெற்றிருந்தாலோ அல்லது மரண சாசனமாக எதையும் சொல்லியிருந்தாலோ அதை நிறைவேற்ற வேண்டியதும் எனது கடமைகளில் ஒன்று.

ஜீனத்: உன் அப்பா இறந்து போவதற்கு இரண்டு நாள் முன்பு உன் சித்தப்பாவுக்கு சில உதவிகள் செய்யச் சொல்லி சொன்னார்.

ரஹீம்: ஆம். மாமாவும் இதைப் பற்றி என்னிடம் சொன்னார். இன்னும் இரண்டொரு நாளில் அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

மாலை மணி ஐந்து. துக்கம் விசாரிக்க ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். அனைவரிடமும் தனது சோகத்தை ரஹீம் பகிர்ந்து கொண்டான்.

மூன்றாம் நாள்: யாரும் இறந்தவுடன் மூன்றாம்நாள் பள்ளியில் வேலை செய்யும் ஜக்கரியா தலைமையில் பாத்திஹா ஓதுவது வழக்கம். இதுவரை ரஹீமிடமிருந்து எந்த செய்தியும் வராததால் தொழுகைக்கு வந்த ரஹீமிடம் 'அப்பாவுக்கு ஃபாத்திஹா ஓத வீட்டுக்கு எப்போ வரணும் ரஹீம்' என்றார்.

ரஹீம்: இல்லே ஜக்கரியா பாய். நான் ஃபாத்திஹா ஓதுவதை எல்லாம் விரும்புவதில்லை. ஏழு, நாற்பது என்று எதுவம் கொண்டாடப் போவதில்லை.

ஜக்கரியா: சின்ன பையன் நீ. விபரம் புரியாம பேசறே! இப்படி சாப்பாடு பாத்திஹா எல்லாம் ஓதாம விட்டதால ஜப்பார் பாய் பேயாக வந்த கதை உனக்கு தெரியுமா? சின்ன புள்ள! மார்க்கத்தோட எல்லாம் விளையாடதப்பா!

ரஹீம்: ஜப்பார் பாய் பேயாக வந்தாரா? ஏதாவது கற்பனையா பேசுறதே உங்க வழக்கமா போச்சு. நான் வர்றேன். எனக்கு வேலை நிறையா இருக்கு.

ஜக்கரியா:அப்போ நான் வேலை இல்லாம இருக்கேங்கிறியா?

ரஹீம்: அடடா...நான் அந்த அர்த்தத்திலே சொல்லல பாய்!

ஆளை விட்டால் போதும் என்று வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரஹீம். வீட்டின் முன் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது ரஹீமின் வரவை எதிர் நோக்கி.

'ஓ...எப்போ வந்தீங்க?'

'10 நிமிடம் இருக்கும். இடத்தை எல்லாம் பார்த்து விட்டோம். திண்ணையில் டேங்கை பிட் பண்ணி விடலாம். வேலையை ஆரம்பிக்கலாமா?'

'ஆரம்பித்து விடுங்கள்'

பைப் வருவதற்கு தோதாக சுவற்றை உடைக்க ஆரம்பித்தனர். மூன்று மணி நேரத்தில் அவர்களின் வேலையும் முடிந்தது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அதுவும் குளிரூட்டப்பட்டு பொது மக்களின் தேவைக்காக இப்றாகிம் பாய் பெயரில் திறந்து விடப்பட்டது.

கோடை வெயிலுக்கு அந்த கிராம மக்கள் அனைவரும் சாதி மத வித்தியாசம் பாராமல் தாகம் தீர்த்துக் கொண்டனர். சிலர் பாட்டில்களிலும் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதை எல்லாம் தூரத்திலிருந்து சந்தோஷமாக ரஹீமும் ராகவனும் பார்த்துக் கொண்டிருந்தனர். தனது தந்தையின் ஞாபகமாக ஒரு சிறந்த சேவையை செய்த திருப்தியில் நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு இரவு படுக்கைக்கு வீட்டை நோக்கி சென்றான்.

இரவு மணி நடுநிசி 1. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மயான அமைதி என்போமல்லவா அதுபோல் அந்த ஊர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. எங்கிருந்தோ ஒரு தூரத்தில் நாய் ஊளையிடுவது சன்னமாக வந்து கொண்டிருந்தது. எங்கும் இருட்டு. கோட்டான்களின் சத்தம் வேறு இருட்டின் தன்மையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

'டொக்' …….'டொக்'……………

வாசலில் இரண்டு கற்கள் வெயிலுக்காக போடப்பட்ட தகரங்களின் மீது வந்து விழுந்தன. கணவனின் இறப்பால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ஜீனத்துக்கு சத்தத்தோடு இரண்டு கற்கள் வந்து விழுந்தவுடன் திடுக்கென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார். மணியை பார்த்தார். மணி இரண்டு. இந்த நேரத்தில் கல் வாசலுக்கு எப்படி வந்தது? வாசலில் யாரோ வெள்ளை உடையில் செல்வது போலவும் ஜீனத்துக்கு தோன்றியது. உடலில் 'தடுக்' கென்று ஒரு சிலிர்ப்பு வந்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள். மகனோ மாடியில் தூங்குகிறான். பயத்தில் வேலைக்காரப் பெண்ணை எழுப்பச் சென்றார்.

'தட்....தட்....தட்'.......அடுத்து வேகமாக வாசல் கதவை யாரோ உலுக்குகின்றனர். மனிதர்கள் யாரும் உலுக்கினால் இவ்வளவு வேகமாக சத்தம் வந்திருக்காது. ஜீனத்துக்கு பயத்தில் வார்த்தைகள் வெளியில் வரவில்லை.

(தொடரும்)

----------------------------------------------------

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி ‘என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் தர்மம் கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தார்கள்.
-(அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:— 1. நிலைத்து நிற்கும் தர்மம் 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

"நிச்சயமாக! அல்லாஹ் யாருக்கு எவ்வளவு பங்கு உரித்தானதோ, அந்த அளவு அவர்களுக்கு வழங்கி விட்டான். எனவே, வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு மரண சாசனம் செய்யலாகாது என நபி (ஸல்) கூறினார்கள்.
அபு உமாமதல் பாஹிலீ (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் 2870வது ஹதீஸாகும்.

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, "வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?" எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, "மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்", என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் "மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது" என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்.

ஆதாரம் : புகாரி: 3936, 4409, 5668, 6373; முஸ்லிம்;

முஅத்தா; அபூதாவூத்; நஸயீ; திர்மிதீ

வஸிய்யத் (உயில்) அவசியமா?
வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும்.

வஸிய்யத் செய்யத்தக்க பொருள்வளம் பெற்றவராக ஒருவர் இருந்தால், அப்பொருள் அவருக்குக் கிடைத்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வஸிய்யத்து எழுதப்பட்டு விட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ)


"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." (அல் குர்ஆன் 4 : 7)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.
நூல் : புகாரி 1313




11 comments:

சிராஜ் said...

ஸலாம் அண்ணன்,

அருமையான பதிவு..கதையின் ஊடே அழகாக இஸ்லாமிய மூட நம்பிக்கைகளை சொல்லி அதற்கான சரியான் தீர்வையும் சொல்லி உள்ளீர்கள்.. இதை படித்தவர்களுக்கு இஸ்லாத்தில் புரோகிததுக்கு வேலை இல்லை என்பது புரிந்து இருக்கும்... நல்ல முயற்சி..அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன்..

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//அருமையான பதிவு..கதையின் ஊடே அழகாக இஸ்லாமிய மூட நம்பிக்கைகளை சொல்லி அதற்கான சரியான் தீர்வையும் சொல்லி உள்ளீர்கள்.. இதை படித்தவர்களுக்கு இஸ்லாத்தில் புரோகிததுக்கு வேலை இல்லை என்பது புரிந்து இருக்கும்... நல்ல முயற்சி..அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன்.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

JUNE 09: கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நான்குபேர் தலைமறைவாக உள்ளனர். கோவா மாநிலம் மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது.


2009 அக்டோபர் 16-ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய தினம் கோவா மாநிலம் மர்கோவாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தானைச் சார்ந்த 12 தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தியதாக புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது. இதில் 2 பேர் வெடிக்குண்டை கொண்டு செல்லும்போது குண்டுவெடித்ததில் இறந்தனர். ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.

சிந்திக்கவும்: ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள், பலஸ்தீன தீவிரவாதிகள், விடுதலை புலி தீவிரவாதிகள் என்று அந்நிய நாட்டில் நடக்கும் சுதந்திரதிற்கான யுத்தங்களை கொட்ச்சைபடுத்தி வரிக்கு வரி செய்தி போடும் தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிடாததன் மர்மம் என்ன?

http://www.sinthikkavum.net/2012/06/blog-post_08.html

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்...
மிக அருமையான தொடர். ஆங்காங்கே பின்பற்றப்பட வேண்டிய கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட்டும்... தேவையற்ற மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டும்... செல்லும் நிறைவான இப்பகுதியின் கடைசியில் வில்லனும் வந்துவிட்டான் போல..! ம்ம்ம்... நல்லதொரு ஆக்கப்பூர்வமான கதாசிரியர் ஆகிவிட்டீர்கள்..! வாழ்த்துகள்..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//மிக அருமையான தொடர். ஆங்காங்கே பின்பற்றப்பட வேண்டிய கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட்டும்... தேவையற்ற மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டும்... செல்லும் நிறைவான இப்பகுதியின் கடைசியில் வில்லனும் வந்துவிட்டான் போல..! ம்ம்ம்... நல்லதொரு ஆக்கப்பூர்வமான கதாசிரியர் ஆகிவிட்டீர்கள்..! வாழ்த்துகள்..! //

இந்த பகுதியிலேயே முடிக்கலாம் என்றுதான் இருந்தேன். இன்னொரு விஷயமும் பாக்கி இருக்கிறது. எனவே அதை அடுத்த பகுதியாகவும் நிறைவான பகுதியாகவும் கொடுத்து விடலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

எனக்கு சிறுகதைகள்ன்னாலே மேயறதுக்கு எதுவுமில்லாமல் இருந்தால்தான்.அதிலும் பேய்களுக்கு என்னைப்பிடிச்சாலும் எனக்கு பேய்களைப் பிடிக்காது.

இந்தப் பின்னூட்டம் இரண்டு நாளாக இந்தப் பேய் தலைப்பு கண்ணை உறுத்துவதால் மட்டும்.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//எனக்கு சிறுகதைகள்ன்னாலே மேயறதுக்கு எதுவுமில்லாமல் இருந்தால்தான்.அதிலும் பேய்களுக்கு என்னைப்பிடிச்சாலும் எனக்கு பேய்களைப் பிடிக்காது.//

ஹா..ஹா..அதெல்லாம் இருக்கட்டும். பேய் இருக்கிறதா? இல்லையா? தெளிவான பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

Anonymous said...

Could you please give your email id

Anonymous said...

look at this link
http://www.ndtv.com/video/player/left-right-centre/islamic-banking-in-india-will-it-open-a-pandoras-box/235327?hp

suvanappiriyan said...

Bro Anany!

//Could you please give your email id //

nazeer65@gmail.com

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
மூட பழக்கங்களைபற்றிய அருமையான பதிவு.நம் தமிழகத்தில் இவரைப்போன்ற துணிவு மிக்க இளைஞர்களை கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.இன்னும் சில ஊர்களில் எதற்கு வீணாக பகைத்துகொள்ள வேண்டும் என்று அனுசரித்து போவதையும் பார்கின்றேன்.இது போன்ற பதிவுகள் மூலமாகவும்,பிரச்சாரங்கள் மூலமாகவும் வீரியத்தோடு செயல்பட இறைவன் துணைபுரிவானாக.தொடரட்டும் உங்களின் இது போன்ற பணி
kalam